சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்! பஞ்சமர் நில மீட்பும்!

  1. முகப்பு
  2. சாதிவாரி கணக்கெடுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 16-03-2025 அன்று மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் சேர்ந்த ஆளுமைகள் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்லாயிரக்கணக்கான உறவுகள் பங்கேற்கவிருக்கின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன்?

அள்ளிக் கொடுக்காதே..! அளந்துகொடு! எடுத்துக்கொடுக்காதே..! எண்ணிகொடு!

எந்த சாதியின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதோ, அதே சாதியின் அடிப்படையில் உரிமைகளைப் பெற்றுத்தரக் கொண்டுவரப்பட்டதே இட ஒதுக்கீடு முறையாகும்.

சாதிவாரி மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவதே உண்மையான சமூகநீதியாகும்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அள்ளி கொடுக்காமல் அளந்து கொடுக்க வேண்டும். எடுத்துக் கொடுக்காமல் எண்ணிக் கொடுக்க வேண்டும்

50 பேர் இருக்கும் வீட்டிற்கு 5 பேர் உணவை அனுப்புவதும், 5 பேர் இருக்கும் வீட்டிற்கு 50 பேர் உணவை அனுப்புவதும் சமூக நீதியல்ல; அது சமூக அநீதியாகும்!

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்தால்தான் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க முடியும். சமநிலைச் சமூகத்தை உருவாக்க முடியும்.

பஞ்சமர் நில மீட்பு ஏன்?

ஆங்கிலேயர் காலத்தில் தமிழகம் முழுவதும் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமர் நிலங்களை மீட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

இதுவரை தமிழகத்தை ஆண்ட திராவிடக்கட்சிகள் எதுவும் முன்னெடுக்காத இந்தப் பெரும் முயற்சியை முதல் முறையாக நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது.

பஞ்சமர் நில மீட்பே பைந்தமிழர் உரிமை மீட்பு!

ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!

தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் இம்மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி சிறப்புற நடந்தேற வேண்டிய காலத்தேவை உள்ளது. அதற்குப் பெரும் தடையாக உள்ள பொருளாதாரத்திற்கு மக்களுக்காக மக்களிடமிருந்து வந்த பிள்ளைகள் நாம் நம் மக்களிடமே திரள்நிதி திரட்டுவது என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வருமானம் காக்கும் நம் இனமானம். நாங்கள் கையேந்தி நிற்பது நாளையத் தலைமுறைப் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு என்பதை உணர்ந்து, தமிழ்-தமிழர் உரிமை மீட்கத் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தங்களால் இயன்ற பங்கேற்பை உறுதி செய்து, பொருளாதாரப் பங்களிப்பையும் நல்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

புரட்சி ஓங்குக! இளைய தலைமுறையே தலைமை தாங்குக!

வீறுகொண்டு எழுவோம்! வெற்றி கண்டு மகிழ்வோம்!

நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி